மதிய உணவு திட்ட நிதியை பணப்பரிவர்த்தனை மூலம் மாணவர்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு

மதிய உணவு திட்டத்திற்கான நிதியுதவியை நேரடி பணப்பரிவர்த்தனை மூலம் மாணவர்களுக்கு வழங்க உள்ளது மத்திய அரசு. இதன்மூலம் சுமார் 11.8 கோடி மாணவர்கள் பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 11.8 கோடி மாணவர்களுக்கு நேரடி பணப்பரிவர்த்தனை மூலம் நிதியுதவி அளிப்பதற்கு மத்திய கல்வி அமைச்சர்ரமேஷ் பொக்ரியால் ஒப்புதல் அளித்துள்ளார்.
தகுதியுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இந்த சிறப்பு நலநிதி வழங்கப்படவுள்ளது. இது பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் (PM-GKAY) கீழ் சுமார் 80 கோடி பயனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு 5 கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதின் கூடுதல் நடவடிக்கையாகும்.

இந்த முடிவு குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவைப் பாதுகாக்கவும், சவாலான தொற்றுநோய்களின்போது அவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பாதுகாக்கவும் உதவும்.
இதற்காக மத்திய அரசு சுமார் 1200 கோடி ரூபாய் கூடுதல் நிதியை மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு வழங்கும். மத்திய அரசின் இந்த ஒரு முறை சிறப்பு நல நடவடிக்கை, நாடு முழுவதும் உள்ள 11.20 லட்சம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 11.8 கோடி குழந்தைகளுக்கு பயனளிக்கும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/104314/Mid-Day-Meals--Centre-to-give-monetary-assistance-for-11-8-cr-students.html
Comments
Post a Comment