அரசுப் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்?- ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசுப் பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் கழக கட்டணம் தவிர்த்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும்போது விண்ணப்ப கட்டணமாக 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை வசூலிக்கலாம். ஆனால் செங்கல்பட்டு மாவட்டம் அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை சேரும் மாணவர்களுக்கு ரூ.100 கூடுதலாக வசூலிக்கப்படுவதாக பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முரளிதரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தலைமை ஆசிரியர்கள்மீது நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக பள்ளிக் கல்வி ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவுசெய்துகொண்ட நீதிபதி, அரசுப்பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் கழக கட்டணம் தவிர்த்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளார். மேலும், ஆய்வு செய்த அறிக்கையை பள்ளிக் கல்வித்துறை ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/109842/Chennai-HC-asks-School-Education-Directorate-to-examine-the-government-schools-about-excess-fee.html
Comments
Post a Comment