"ஆட்டம் நடைபெறாதது வெட்கக்கேடானது" - முதல் டெஸ்ட் முடிவு குறித்து கோலி ஆதங்கம்

மழையின் காரணமாக 5-ஆம் நாள் ஆட்டம் நடைபெறாமல்போனது வெட்கக்கேடானது என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக ‘டிரா’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா வெற்றி பெற 157 மட்டுமே தேவைப்பட்டது. மழை காரணமக ஐந்தாம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் இந்திய வீரர்கள் அதிருப்தியடைந்தனர். மேலும் சமூக வலைத்தளங்களில் இந்திய ரசிகர்கள் பலரும் இங்கிலாந்து ஆடுகளங்களை திட்டி தீர்த்தனர்.

இது குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி "ஆட்டத்தின் மூன்று மற்றும் 4 ஆவது நாளில்தான் மழை பெய்யும் என எதிர்பார்த்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 5 ஆம் நாளில் மழை பெய்ததை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. 5 ஆம் நாள் ஆட்டம் நடந்திருக்க வேண்டும். அது நடைபெறாதது வெட்கப்பட வேண்டிய ஒன்று. கடைசி நாள் ஆட்டம் நடைபெற்று இருந்தால் நாங்கள் வெற்றிப்பெற்று இருப்போம். அதில் எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. ஆட்டத்தில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தோம்" என்றார்.

மேலும் பேசிய அவர் "ஆட்டத்தின் 4 ஆம் நாளின் இறுதியில் 52 ரன்களை அடித்துவிட்டோம் என்பதால் கடைசி நாள் ஆட்டத்தை நம்பிக்கையுடன் தொடங்கலாம் என்றே நினைத்தோம். இந்த ஆட்டத்தில் நாங்கள் பேட்டிங் பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டோம். அதிலும் பும்ரா இந்த டெஸ்ட்டில் 9 விக்கெட்டை எடுத்து மீண்டும் பார்முக்கு திரும்பியிருப்பது நம்பிக்கையளிக்கிறது. இந்தத் தொடரை வெற்றியுடன் தொடங்கலாம் என நினைத்தோம். ஆனால் டிராவில் முடிந்தது வருத்தமே" என்றார் விராட் கோலி.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/112356/It-is-a-Shame--says-Virat-Kohli-Disappointed-After-Rain-Washes-Away-Entire-Day-in-Nottingham.html
Comments
Post a Comment