கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக்கோரிய வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக்கோரி திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலன் நடத்திவரும் தொண்டு நிறுவனம் பொதுநல வழக்கு தொடர்ந்தது. இதில் கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகும் எனக் கூறப்பட்டிருந்தது.
அவசர நிலை காலத்தில் மாநில அரசுகளின் அனுமதியின்றி, சட்ட விதிகளை பின்பற்றாமல் கல்வி உள்ளிட்ட சில துறைகள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டதாகவும் இதன் காரணமாகவே நீட் தேர்வுகள், புதிய தேசிய கல்விக் கொள்கை போன்ற சட்டங்கள் மத்திய அரசு மூலம் அமலுக்கு வந்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் மாகாண அரசுகளின் கட்டுப்பாட்டில் கல்வி உள்ளதாகவும், மாநில மக்களின் கல்வித் தேவை, விருப்பம் ஆகியவை அந்தந்த மாநில அரசுகளுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
“பெண்களுக்கென ஒன்றிய அரசு இதுவரை ஒரு நல்லதிட்டம்கூட கொண்டுவரவில்லை”- கனிமொழி குற்றச்சாட்டு
இதை விசாரித்த நீதிபதிகள், கல்வியில் மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டால் மட்டுமே அது முழுமையான கூட்டாட்சி முறையாக இருக்கும் என கருத்து தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கில் தமிழ்நாடு அரசை தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்த்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் எட்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 10 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/115774/Court-ordered-TN-government-to-reply-on-education-in-general-Quota.html
Comments
Post a Comment