ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி - அமைச்சர் அன்பில் மகேஷ்

நவம்பர் 1 முதல் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, திருச்சியில் ஜங்ஷன் ரயில் நிலையம் முன் உள்ள காதிகிராஃப்ட் விற்பனை மையத்தில், காந்தியடிகளின் படத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதல் விற்பனையையும் தொடங்கி வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ''தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களில் ஏற்கனவே சுழற்சி முறை வகுப்புகள் என்பன உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் தொடரும். பள்ளிக்கூடத்துக்கு வரும் பிஞ்சுக் குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவது உள்ளிட்ட நடைமுறைகள் கூடுதல் கவனத்துடன் கண்காணித்து கட்டுப்பாடுகளும் வழிகாட்டு நெறிமுறைகளும் மேம்படுத்தப்படும்.

மேலும் நவம்பர் 1-ஆம் தேதி நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளதால், கொரோனா தடுப்பு மட்டுமின்றி, அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதிலும் அரசு கவனத்துடன் உள்ளது. நவம்பர் 1-ஆம் தேதி 1 வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை. ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.'' என்று அவர் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/117563/Education-Minister-Anbil-Mahesh-Poyyamozhi-said-only-20-students-would-be-allowed-in-the-classroom.html
Comments
Post a Comment