நீட் தேர்வை செல்லாது என அறிவிக்கக்கோரி மனு: தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

நடந்து முடந்த நீட் தேர்வை செல்லாது என அறிவிக்கக்கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
நீட் நுழைவுத் தேர்வு 2021-ல் வினாத்தாள்கள் கசிந்ததால், தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரிய மனு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகேஷ்வர ராவ் மற்றும் கவாய் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனு விசாரணைக்கு வந்தபோது ரூ.5 லட்ச அபராதத்துடன் அம்மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், மனுவுக்கு தங்களின் கடுமையான கண்டனங்களையும் தெரிவித்தனர். வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஷ்வர ராவ், “7.5 லட்ச மாணவர்கள் எழுதியுள்ள ஒரு தேர்வை, 5 எஃப்.ஐ.ஆர். பதிவாகியிருப்பதை வைத்து மட்டும் அத்தேர்வு செல்லாது என நீதிமன்றம் சொல்லாது என உங்களுக்கே தெரியாதா?
தொடர்புடைய செய்தி: "மத்திய அரசு நீட் தேர்வை கைவிடும் வரை மாணவர்கள் போராட்டத்தை கைவிடக் கூடாது" சு.வெங்கடேசன்
இந்த மனுதாரர் தன்னை ஏதோ சாகசக்காரர் என நினைத்து இப்படியான ரிட் மனுவை அளித்துள்ளார். இம்மனு அபராதத் தொகை 5 லட்சத்துடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. அபராதத் தொகையை மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தான் செலுத்த வேண்டும்” என திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும் இவ்வழக்கின் வழக்கறிஞரிடம் நீதிபதி நாகேஷ்வர் ராவ், “என்ன மாதிரியான ரிட் மனுவை நீங்கள் பதிவு செய்திருக்கின்றீர்கள் என உங்களுக்கு தெரிகிறதா? உங்களிடம் இதுபற்றி வழக்கு போட வேண்டும் என மனுதாரர் சொன்னபோதே, இம்மனுவை பதிவுசெய்தால் நீதிமன்றத்தில் அது அபராதத்துடன் ரத்து செய்யப்படும் என உங்களுக்கே தெரியாதா?” என கடுமையாக சாடினார்.
பின்னர் அபராதத் தொகையை ரத்து செய்யும்படி கேட்டுக்கொண்டதால், அதை ஏற்றுக்கொண்டு அபராதத்தை மட்டும் ரத்து செய்வதாக அறிவித்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News http://puthiyathalaimurai.com/newsview/117764/Supreme-Court-Dismisses-Plea-To-Cancel-NEET-UG-2021-Over-Alleged-Malpractices.html
Comments
Post a Comment